

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் நேற்று சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். உடன் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் உள்ளனர்.
சென்னை: கோயில்களில் பக்தர்கள் முழு மனநிறைவோடு சுவாமி தரிசனம் செய்ய அனைத்து வசதிகளையும் உருவாக்கித் தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக ரமேஷ் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார். அறநிலையத் துறை செயலர் ஸ்வர்ணா, ஆணையர் பி.என்.தர், கூடுதல் ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ரமேஷ் பேசியதாவது: உறுதியான, நம்பிக்கையான, தூய்மையான நிர்வாகத்தை வழங்குவதாக முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார். அதை நாம் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். மற்ற துறைகளைவிட நமது துறை சிறப்பாக சேவையாற்றி வருகிறது என்று அனைவரும் பாராட்டும் வகையில் உயர் அலுவலர்கள் முதல் கோயில் கடைநிலை பணியாளர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும்.
நமது பாரம்பரியம், கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்கள், பக்தர்கள் முழு திருப்தியடையும் வகையிலும் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். கோயில்களின் நிர்வாகம் தொடர்பாக எந்த குறைபாடும் ஏற்படாத வகையில் நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதோடு, பக்தர்கள் முழு மனநிறைவோடு சுவாமி தரிசனம் செய்ய அனைத்து வசதிகளையும் உருவாக்கித் தர வேண்டும். துறை சார்ந்த எதிர்காலத் திட்டங்கள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை, ஓலைச்சுவடி ஆய்வு மையம், ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் ஆகியவற்றையும் அமைச்சர் பார்வையிட்டார்.