

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார். உடன் மதுரை ஆட்சியர் ஆகாஷ், எஸ்.பி. அர்விந்த்.
மதுரை / சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என்று மதுரையில் தமிழக சட்டம் மற்றும் மின்துறை அமைச்சர் சிடிஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருநாளின்போது கோயில் நிர்வாகம் சார்பில் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2025 டிச.3-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாளின்போது, மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற உத்தரவிட வேண் டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் எழுமலையைச் சேர்ந்த ராம. ரவிகுமார் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என டிச.1-ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, டிச.3-ம் தேதி தீபம் ஏற்றுவதற்கு மனுதாரர் ராம.ரவிக்குமார் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கோயில் முன்பு திரண்டனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீபத்தூணில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால், பெரிய அளவில் போராட்டம் நடந்தது.
இதுகுறித்து மீண்டும் விசாரித்த நீதிமன்றம், டிச.4-ம் தேதி இரவு மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் துணை கமாண்டன்ட் பாதுகாப்பில் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மனுதாரரை அனுமதிக்க வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதை காரணம் காட்டி, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாது என போலீஸார் தடை விதித்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர், கோயில் துணை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. டிச.5-ம் தேதி ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டு மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டது. எனினும், 3-வது முறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை எதிர்த்தும், அதற்கு தடை கோரியும் தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில், தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள், ‘‘திருக்கார்த்திகையின்போது வழக்கமான இடத்திலும், கூடுதலாக மலை மீதுள்ள தீபத்தூணிலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும்’’ என்று உத்தரவு பிறப்பித்தனர். இதை எதிர்த்தும், மறுசீராய்வு கோரியும் தமிழக அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரு நீதிபதிகள் அமர்வு விசாரணையின்போது, கார்த்திகை தீப வழக்கில் தனி நீதிபதியின் அனைத்து உத்தரவுகளுக்கும் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ‘‘தனி நீதிபதி உத்தரவை செயல்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது? வழக்கில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டும்’’ என்று நீதிபதிகள் கூறினர். மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக் கூடாது என்பதில் கடந்த திமுக அரசு உறுதியாக இருந்தது. இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, இதில் என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பதில் பல்வேறு தரப்பிலும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், மதுரையில் மாவட்ட உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏவும், தமிழக சட்டம் மற்றும் மின்துறை அமைச்சருமான நிர்மல்குமார் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையே தொடரும். மக்கள் அமைதியை விரும்புகின்றனர். தமிழக அரசின் கொள்கையும் அதுதான்’’ என்றார். இதன்மூலம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி இல்லை என்பதை அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
தீபம் ஏற்ற பாஜக வலியுறுத்தல்
இந்நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்ற அரசு அனுமதிக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன்: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தும், சட்டம் பயின்ற அமைச்சர் நிர்மல்குமார் முரணாகப் பேசுவது வருத்தம் அளிக்கிறது. அவர் சட்டத்துறை அமைச்சராக இருப்பதற்குத் தகுதியானவரா என்ற கேள்வி எழுகிறது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாததால்தான் முந்தைய அரசு புறந்தள்ளப்பட்டது. அவசர காலத்தில் அடித்த விசில் சத்தத்தில் வெற்றி பெற்ற உங்களுக்கு உரிமைக்காக போராடும் மக்களின் உரத்த குரல் காதில் விழவில்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்பையோ, வழக்கத்தையோ மதிக்காமல் அமைச்சர் பேசியுள்ளார்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்: நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட கடந்த திமுக ஆட்சியில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படவில்லை. புதிதாக அமைந்த தவெக அரசு, மலை மீது தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்.
தீபம் வழக்கின் பிரதான மனுதாரர் ராம.ரவிக்குமார்: திராவிட மாடல் அரசும், திருச்சபை மாடல் அரசும் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைபோலவே செயல்படுகிறது. தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, அமைச்சர் இவ்வாறு பேசுவது, நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும். சட்ட அமைச்சரின் கருத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், ஒரு முருக பக்தராக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று வந்த முதல்வர் விஜய்யும் ஆதரிக்கின்றனரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.