

சென்னை: தற்காலிக ஊழியர்களை எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
‘தேர்தல் நெருங்கும் நிலையில் தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துவது ஃபேஷன் ஆகிவிட்டது’ என்று செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
தற்காலிக ஊழியர் பணி என்பது ஆண்டுக்கு 11 மாதம் ஆகும். அது மீண்டும் தொடரும்போது, இடையில் ஒரு நாள் விடுமுறை வழங்கிவிட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பணிபுரிவார்கள். இதுபோன்று பணியில் இருப்பவர்களை, தமிழகம் மட்டுமின்றி, வேறு எந்த மாநில அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது. அவ்வாறு நிரந்தரம் செய்தால் நீதிமன்றம் தலையிடும். இதை தெரிந்துகொண்டே போராட்டம் செய்வது, ஒருசிலர் தூண்டிவிட்டு நடக்கிறது. தூண்டிவிட்ட நபர் மீது புகார் கொடுத்துள்ளோம்.
தேர்தல் நடக்க உள்ள சூழலில், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இது போன்று தூண்டிவிடப்படும் போராட்டங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கூறினேனே தவிர, போராட்டங்களை கொச்சைப்படுத்துவது திமுக அரசின் நோக்கம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.