

அமைச்சர் ஐ.பெரியசாமி | கோப்புப் படம்
சென்னை: சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீஸை எதிர்த்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் காலக்கட்டத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, அமைச்சர் பெரியசாமி, அவரது மகனும், பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார், மகள் இந்திரா உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அமைச்சர், எம்எல்ஏ அலுவலகங்களில் கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள், செல்போன், நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவற்றை அமலாக்கத் துறையினர் கைப்பற்றினர். இதன் தொடர்ச்சியாக சொத்துகளை முடக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு, அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை எதிர்த்தும், அமலாக்கத் துறை விசாரணையை எதிர்த்தும் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சொத்து முடக்கம் தொடர்பான விசாரணை அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் பெரியசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அமலாக்கத் துறையை அணுகும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.