

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் இன்று தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து, நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னையில் கூவம், அடையாறு, கொசஸ்தலை போன்ற ஆறுகளும், பக்கிங்காம் கால்வாய், ஒக்கியம் மடுவு போன்ற வடிகால்களும், வேளச்சேரி ஏரி, புழல் ஏரி, நாராயணபுரம் ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி போன்ற ஏரிகளும் அடையாறு, கூவம் மற்றும் முட்டுக்காடு போன்ற முகத்துவாரங்களும் உள்ளன.
சென்னையில் 60 கி.மீ நீளத்துக்கு ஆறுகளும், 54 கி.மீ நீளத்துக்கு கால்வாய்களும் மற்றும் 3,700 ஹெக்டேர் பரப்பளவுக்கு ஏரிகளும் அமைந்துள்ளன. இவற்றை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
எனவே, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை பெரு நிறுவனப் பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் தூர்வாரி பராமரிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இப்பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தூர்வாரும் பணியை நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் இன்று (27-ம் தேதி) களஆய்வு செய்து தொடங்கி வைக்கிறார். மூன்று நாட்கள் நடைபெறும் சிறப்பு ஆய்வில் மொத்தம் 6 முக்கிய இடங்களில் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட உள்ளன.
அதன்படி, இன்று கோயம்பேடு அருகிலுள்ள கூவம் நதிப் பகுதி மற்றும் ஒக்கியம் மடுவு ஆகிய இடங்களும், 28-ம் தேதி மணப்பாக்கம் அருகிலுள்ள அடையாறு நதிப் பகுதி மற்றும் சோழிங்கநல்லூர் அக்கரை பாலம் அருகிலுள்ள தெற்கு பக்கிங்காம் கால்வாய் ஆகிய இடங்கள், 29-ம்
தேதி வேளச்சேரி ஏரி மற்றும் நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து களப்பணியை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.