

சென்னை: வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஏற்கெனவே கடந்த 2 மாதங்களாக சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் தடைபட்டதால் உணவகங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்ததுடன், உணவுப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: வணிக காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூ.993 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான உணவகங்கள், தேநீர் உள்ளிட்ட பலகாரக் கடைகள் மூடப்பட்டுள்ளன. வணிக காஸ் சிலிண்டர்கள் சிறு, குறு வணிகர்களின் கைகளுக்கு எட்டாப் பொருளாகிவிட்டது. மக்கள் நலனை பேணுவதாக பேசி வரும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பின் அனுமதி கேட்டு காத்து கிடப்பது வெட்கக்கேடானது. இந்த விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.