

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பிரசாத விற்பனை நிலையம் நேற்று மாலை மூடப்பட்டிருந்தது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கோயில் பிரசாதமாக முறுக்கு, மிளகு வடை, அதிரசம், லட்டு உள்ளிட்டவைகள் ரூ.50-க்கும், புளிசாதம் மற்றும் சர்க்கரை பொங்கல் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
இந்நிலையில் அமெரிக்க- இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நாடு முழுவதும் நிலவி வருகிறது. இதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலுக்கும் வணிக காஸ் சிலிண்டர் கிடைக்காததால் பிரசாதம் தயாரிக்க முடியாமல் இலவச லட்டு பிரசாதம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், பக்தர்களுக்கு விற்கப்படும் பிரசாதங்களான முறுக்கு, மிளகு வடை, அதிரசம், லட்டு உள்ளிட்டவைகளும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் தயாரிக்க முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது பக்தர்களுக்கு புளிசாதம், சர்க்கரை பொங்கல் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அண்ணாமலையார் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சுவாமி தரிசனம் முடிந்து, வெளியே வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த பிரசாதம் நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பரணிதரணிடம் கேட்டபோது, “பக்தர்களுக்கு தொடர்ந்து பிரசாதம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வணிக காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதற்கு மாற்றாக கோயிலில் நிரந்தரமாக மின்சாரம் மூலம் பிரசாதம் தயாரிப்பதற்காக மின்சாதன அடுப்புகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளன” என்றார். மேலும், கோயில் வளாகத்துக்குள் விறகு அடுப்பு பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது.