

எல்.முருகன் | கோப்புப் படம்
தவெக தலைவர் விஜய் தே.ஜ கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்க ‘எல்லோரும் வருவார்கள்’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சி மற்றும் தே.ஜ. கூட்டணி பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சி தே.ஜ. கூட்டணி பொதுக்கூட்டம், மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் கூட்டமாக இருக்கும்.
பிரதமர் மோடி எப்போது தமிழகத்துக்கு வந்தாலும், அப்போது தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் நிதியை வழங்கி வருகிறார். கடந்த 11 ஆண்டுகளில் ரூ. 13 லட்சம் கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது என்றார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்ற கேள்விக்கு ‘எல்லோரும் வருவார்கள்’ என்றார்.
சரத்குமார் பேட்டி: திருச்சியில் பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் அளித்த பேட்டியில், ‘‘விஜய்க்கு செயல்பாடே கிடையாது. இலவசங்களை குறை சொன்ன இவர் திரும்ப ஏன் அதைப் பத்தி பேசிட்டு இருக்காரு... வேற ஏதாச்சும் சொல்ல வேண்டியது தானே. அவரால ஊழலற்ற ஆட்சியைத் தருவேன் என்று மட்டும் தான் சொல்ல முடியும், வேறென்ன சொல்லமுடியும்?
1996-ல் இதைவிட எனக்கு இளைஞர் கூட்டம் வந்திருக்கிறது. ஆகவே, வெறும் கூட்டத்தை வெச்சு எல்லாம் கணக்குப் பண்ண முடியாது. அரசியல் களத்துக்குப் போன பிறகு தான் நிலவரத்தைப் பார்க்க முடியும். அப்படியே விஜய் 15 சதவீத வாக்குகளை வாங்கினாலும் கூட, ஒரு சீட் கூட ஜெயிக்க மாட்டார்’’ என்று கூறினார்.