

கிருஷ்ணசாமி
சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஆயத்தமாகி வருகிறோம் என, டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சி சார்பில் விருப்ப மனு பெறப்பட்டு, 21 மாவட்டங்களை சேர்ந்த 300- க்கும் மேற்பட்டவர்களிடம் நேர்காணல் நடைபெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக நடந்த நேர்காணலில் 60 பொது தொகுதி மற்றும் தனித் தொகுதி அடையாளம் காணப்பட்டு வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்ததாக 10 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பல சுற்று பேச்சு நடத்தினோம். புதிய தமிழகத்திற்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்றோம்.
தேவேந்திர குல மக்களை அதிமுக அவமரியாதை செய்து விட்டது. நாங்கள் தனித்துப் போட்டியிடும் சூழல் உருவாகி விட்டது. நாங்கள் 120 தொகுதியில் வலுவாக இருக்கின்றாம். சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட முழுமையாக ஆயத்தமாகிவிட்டோம். திமுக உடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. 2 நாட்களில் வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.