

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், குறிப்பிட்ட சில தொகுதிகளில் திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளின் வெற்றிக்கு கிருஷ்ணசாமி, சசிகலா உள்ளிட்டோரின் கட்சிகள் பாதிப்பை ஏற்படுத்தின.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு தொகுதிகளில் திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளுக்கு கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களும், சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களும் அதிர்ச்சி அளித்தனர்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஆரம்ப சுற்றுகளில் முன்னிலை வகித்தாலும் பின்னர் 5-வது இடத்துக்கு சென்றார்.
அவர் 15 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேலாக வாங்கி திராவிடக் கட்சிகள் தோல்வியைச் சந்திக்க ஒரு காரணியாக அமைந்தார். திருநெல்வேலி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் ஷியாம் 10,643 ஓட்டுகளை வாங்கினார்.
இது திமுக வேட்பாளர் சுப்ரமணியன் 11 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைய காரணமாக அமைந்தது. வைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் ராஜசுதன் 1,015 ஓட்டுகள் வாங்கிய நிலையில், அதிமுக வேட்பாளர் 1,186 ஓட்டுகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சரவணனிடம் தோல்வி அடைந்தார்.
கோவில்பட்டி தொகுதியில் ஒவ்வொரு சுற்றிலும் தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியன், திமுக வேட்பாளர் கருணாநிதி இடையே கடும் போட்டி நிலவியது. குறிப்பாக 24-வது சுற்று முடிவில், 446 ஓட்டுகள் வித்தியாசத்தில் கருணாநிதி முன்னிலை இருந்தார்.
இருப்பினும், அதே தொகுதியில் சசிகலா கட்சி வேட்பாளர் 446 ஓட்டுகளை பிரித்து, திமுகவுக்கு அதிர்ச்சி அளித்தார். உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 1,805 ஓட்டுகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் விஜய்யிடம் தோல்வியைச் சந்தித்தார்.
இத்தொகுதியில், சசிகலாவின் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி வேட்பாளர் அய்யப்பன் 16,620 ஓட்டுகள் பெற்றது முக்கியக் காரணமாக அமைந்தது.
மன்னார்குடி திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா 1,566 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதற்கு சசிகலா கட்சியின் வேட்பாளர் ராசுபிள்ளை 1,949 ஓட்டுகளையும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் கோவிந்தராஜ் 635 ஓட்டுகளையும் பிரித்தது காரணமாக அமைந்தது.
சாத்தூர் தொகுதியில் 6 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் திமுக, பாஜக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவினாலும், சசிகலா கட்சி வேட்பாளர் இசக்கி ராஜா 11 ஆயிரம் ஓட்டுகளைப் பிரித்தது முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது.