இணையவழி கல்வி மாணவர்களை சென்றடைய கிராமப்புற தபால் நிலையங்களில் ஸ்மார்ட் டிவிக்கள்: சென்னை ஐஐடி இயக்குநர் வேண்டுகோள்
சென்னை: கல்வி நிறுவன வளாகங்களில் இருக்கும் தபால் நிலையங்களை அஞ்சல் துறை புதுப்பித்து வருகிறது. அந்த வகையில், சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள துணை தபால் நிலையம் அடுத்த தலைமுறையினரின் பயன்பாடுகளுக்கு ஏற்ப, ‘என்-ஜென்’ (நியூ ஜெனரேஷன்) தபால் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
இளம் பயனாளர்கள் எளிதில் அணுகும் வகையில் ஏ.சி. இலவச வைஃபை, புத்தகங்கள், பலகை விளையாட்டுகள், சார்ஜிங் போர்ட் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தபால் நிலையத்தை ஐஐடி இயக்குநர் காமகோடி நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறும்போது, “இளைஞர்களைக் கவரும் வகையில் ஏ.சி. வசதியுடன் நவீன தபால் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் இதுபோல உருவாக்கப்பட வேண்டும்.
ஐஐடி பேராசிரியர்களால் நடத்தப்படும் ‘கல்வி சக்தி’ திட்டத்தை கிராமப்புற மாணவர்களுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டு வருகிறோம். இதற்காக, கிராமப்புற தபால் நிலையங்களில் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டிவியை அஞ்சல் துறை அமைத்து தரவேண்டும். அதன்மூலம் ஐஐடி பாடத்திட்டங்கள் கிராமப்புற மாணவர்களுக்கும் சென்றடையும்” என்றார்.
சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் கூறும்போது, “தமிழகத்தில் முதன்முதலாக கொங்கு பொறியியல் கல்லூரியிலும், தற்போது சென்னை ஐஐடியிலும் என்-ஜென் தபால் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்து, எஸ்ஆர்எம் கல்லூரியில் தொடங்கப்பட உள்ளது. தபால் நிலையங்கள் மற்றும் அஞ்சல் துறையின் சேவைகளை நோக்கி இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார். சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மனோஜ் மற்றும் அஞ்சலக அதிகாரிகள், ஐஐடி பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.
