

சென்னை: வேளச்சேரியில் இளைஞர் ஒருவரை 4 பேர் கும்பல் பட்டாக் கத்தியால் வெட்டி சாய்த்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரயிலில் கத்தியைக் காட்டி மிரட்டுவது போல ரீல்ஸ் எடுத்த சிறுவர்கள், அப்போது ஏற்பட்ட தகராறில் வட மாநில இளைஞரை, கொடூரமாக அரிவாளால் தாக்கிய காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா போதையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அந்த நினைவு மறைவதற்குள் அடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேளச்சேரியில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் நேரு நகர், ஏ.எல்.முதலி தெருவில் நடந்து சென்ற இளைஞர் ஒருவரை இருசக்கர வாகனங்களில் வந்த 4 இளைஞர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
வெட்டுக் காயங்களுடன் ரத்தம் வடிந்த நிலையில் சாலையில் அந்த இளைஞர் சரிந்த நிலையிலும் தொடர்ந்து வெட்டிக் கொண்டே இருந்துள்ளனர்.
போதையில் பழிக்குப் பழி: இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கற்கள், கம்புகளை வீசி எறிந்தனர். இதனால் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். பொதுமக்கள் தடுக்கவில்லையென்றால் இது கொலையில் முடிந்திருக்கும். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் தாக்குதலுக்கு உள்ளானவர் வேளச்சேரி, லட்சுமி நகரை சேர்ந்த பார்த்திபன் (23) என்பதும், உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
படுகாயமடைந்த பார்த்திபன் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில், தாக்குதல் தொடர்பாக வேளச்சேரியைச் சேர்ந்த நந்தா (24), சுந்தர் (22), விஷ்ணு (21) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனர். தீபாவளியன்று பார்த்திபன் தாக்கியதால் பழிக்குப் பழியாக போதையில் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
பொது வெளியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் சர்வ சாதாரணமாக நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.