

தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்வதாக ஜோதிமணி எம்.பி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிலையில், அவ்வாறு பதிவிட்டது அதிர்ச்சி அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கரூர் காங்கிரஸ் எம்பி-யான ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் நேற்று பதிவிட்டதாவது: எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது கட்சி எம்பி-யை, தேர்தல் நேரத்தில்,தேர்தல் ஆணையத்துக்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸில் கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் கவலை மற்றும் மிகுந்த வேதனை அளிக்கிறது. தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சினைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது.
தமிழகம் எந்தக் காலத்திலும் இல்லாத ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடம் எதிர்நோக்கி உள்ளது. எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி, ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவர் காமராசர், பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில், எதிர்வரும் தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி, அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுகிறது. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை, ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத, பிரிவினைவாத சூழ்ச்சிக்கு அடிபணியாமல் சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழக மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது.
தமிழ்நாடு காங்கிரஸில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை முன்னெடுக்காமல், மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசாமல், வெறும் கூட்டல், கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு, ஒரு சிலரின் சுயநலத்துக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது.
ராகுல்காந்தியின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்புக்கும், ஒப்பற்ற தியாகத்துக்கும் நாம் துரோகம் செய்ய முடியாது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்துக்கும், நேரு, காந்தி குடும்பத்தின் தியாகத்துக்குமான தமிழக மக்களின் அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: ஜோதிமணி எம்.பி எப்படி பதிவிட்டாலும் அவர் எனது மரியாதைக்குரிய சகோதரி. அப்பகுதியில் உள்ள பிரச்சினைக்கு அவர்தான் பேசி தீர்வுகாண வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் எல்லா இடங்களிலும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஜோதிமணியின் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குச்சாவடி முகவரை நியமிக்க முழு அதிகாரம் வழங்கியிருக்கிறோம். ஏன் இத்தகைய பதிவை பதிவிட்டார், யார் வேலை செய்யவில்லை என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்.
ஒவ்வொரு நிர்வாகியும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்வது தான் தலைமை பண்பு. குறைகளைத் தெரிவித்தால் நான் சரி செய்து கொடுக்கிறேன். ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். என் அதிகாரத்துக்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கை எடுத்து, அகில இந்திய காங்கிரஸின் முடிவுக்காக அனுப்பி இருக்கிறேன். இதற்கு மேல் மாநில தலைவர் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தால், நான் செய்யத் தயாராக இருக்கிறேன். நாங்கள் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.
24 மணி நேரமும் காங்கிரஸுக்காக பணியாற்றுகிறேன். கிராம கமிட்டிகள் அமைத்திருக்கிறேன். வாக்குத் திருட்டுக்கு எதிராக இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக செயல்பட்டிருக்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸுக்கு இதுவரை பாராட்டுக்கள் தான் வந்துள்ளன. இது தொடர்பாக என்னிடமோ, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடமோ பேசி இருக்கலாம். அழிவுப்பாதையில் இருந்து காங்கிரஸை மீட்டெடுக்க தான் நாம் எல்லோரும் இருக்கிறோம். அந்த வார்த்தையை எப்படிச் சொன்னார்கள் என்று தெரியவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டம் இல்லை.
நான் கடந்த 23 மாதங்களாக மாநில தலைவர் பதவியில் இருக்கும்காலத்தில், அவரின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறேன். ஏன் பொதுவெளியில் அப்படி பதிவிட்டார்கள் என்பது புரியவில்லை. அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.