‘இது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?’ - திமுக எம்எல்ஏ கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

ஸ்டாலின்

ஸ்டாலின்

Updated on
1 min read

சென்னை: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் தவெக ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது டேக் டைவர்ஷன் மாடல் த.வெ.க. அரசு.

"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?. கைது செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?.

ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல. சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், பின்விளைவுகள் ஏற்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>ஸ்டாலின்</p></div>
நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி - காவல்துறை தடியடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in