நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி - காவல்துறை தடியடி

நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி - காவல்துறை தடியடி
Updated on
1 min read

புது டெல்லி: நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை லேசான தடியடி நடத்தியது.

நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நாடாளு​மன்​றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இன்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை லேசான தடியடி நடத்தியது. இந்தப் போராட்டத்தால் புது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புது டெல்லியில் போராட்ட அறிவிப்பு காரணமாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்த பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்ட அறிவிப்பால் ஜந்தர் மந்தர், நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணி அறிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் விரைவு அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை முன்னிட்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக இன்று ஐந்து மெட்ரோ நிலையங்களை மூடுவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.

புது டெல்லி மாவட்டம் முழுவதும் பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு ( ஊரடங்கு உத்தரவு) அமலில் இருப்பதாக டெல்லி காவல்துறை அறிவித்தது. இந்த உத்தரவுகளின்படி, முன் அனுமதியுடன் ஒதுக்கப்பட்ட ஜந்தர் மந்தரைத் தவிர மற்ற இடங்களில் போராட்டம், பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று சிஜேபியின் யின் நாடாளுமன்றப் பேரணிக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. மேலும், புது டெல்லியின் தடை உத்தரவுகளை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.

போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தும் காணொளியைப் பகிர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"பிரதமர் மோடி, உங்கள் காவல்துறையினரை விலகிச் செல்லுமாறு கூறுங்கள். நீங்கள் மறந்துவிட்டிருந்தால் சொல்கிறோம், நாம் ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக மற்றும் அமைதியான போராட்டத்தை நீங்கள் நசுக்க முயற்சிப்பதை உலகம் முழுவதும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது." எனத் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி - காவல்துறை தடியடி
“நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும்” - பிரதமர் மோடி நம்பிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in