

மதுரை: “திருப்பரங்குன்றத்தில் தீபம், எங்கே ஏற்றப்பட வேண்டுமோ, எப்போது ஏற்றப்பட வேண்டுமோ, அங்கே வழக்கம்போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம். இப்படிப்பட்ட அரசை, ஆன்மிகத்துக்கு எதிரி என்று சொன்னால், அப்படி சொல்லக் கூடியவர்களுடைய உள்நோக்கம் என்ன என்று, உண்மையான பக்தர்களுக்கு தெளிவாக தெரியும்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (7.12.2025) மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரையில், ‘ ஒவ்வொரு நாளும் பல லட்சம் மக்கள் பயனடைகின்றது போல, நாம் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான், எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார்கள். வயிற்றெறிச்சலிலும், ஆற்றாமையிலும், ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள். நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் ‘வேறு’ அரசியலை பேசுகிறார்கள். நான் உறுதியாக சொல்கிறேன்.. அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அத்தனையும் நாங்கள் முறியடிப்போம். அதை சிதைப்போம்! இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் அந்த “பாச்சா” எல்லாம் பலிக்காது! எதுவும் எடுபடாது!
நேற்று முன்தினம் நான் ஒரு ட்விட் செய்திருந்தேன். பார்த்திருப்பீர்கள் – படித்திருப்பீர்கள் – மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல் – அதை நிரூபிக்கின்ற வகையில் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு, 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 56 ஆயிரத்து 766 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்து கொண்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இதுதான் எங்கள் அரசியல். மதுரையையும், அதை சுற்றி இருக்கின்ற பகுதியையும், நல்ல தரமான உயர்தர வேலைவாய்ப்புள்ள இடங்களாக உருவாக்க வேண்டும் என்று இந்த அரசு ஓயாமல் பாடுபடும்.
சிலவற்றை கம்பேர் செய்து சொல்கிறேன்., நீங்களே சிறிது யோசித்து பாருங்கள்! நாம் ஆட்சிக்கு வந்ததும் இந்த மதுரையில், ஒரு அறிவுத் திருக்கோயிலாக, கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என்று அறிவித்தோம். அதை நாம் சொன்ன காலத்துக்கு முன்பே, பெரிதாக கட்டி முடித்து, இப்போது பல லட்சம் நபர்கள் பயனடைந்து கொண்டு வருவதை நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், பத்து வருடத்திற்கு முன்பு, ஒன்றிய பா.ஜக. அரசு, மதுரைக்கு அறிவித்த எய்மஸ் மருத்துவமனை என்ன ஆனது? இன்னும் வரவில்லை!
மதுரை மண்ணில் நம்முடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, உலக தரத்தில், 62 கோடி ரூபாயில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு அறிவிப்பை அறிவித்துவிட்டு, அறிவிப்போடு நிறுத்திக் கொள்ளாமல், அதை அமைத்திருக்கிறோம். இதே பாஜக அரசு நம்முடைய மதுரையில் நடந்த கீழடி அகழ்வாராய்ச்சியை நிறுத்தப் பார்த்தார்கள்.
நாம் ஆட்சிக்கு வந்ததும், பல கட்டங்களாக கீழடி ஆராய்ச்சியை முன்னெடுத்து வருவது மட்டுமல்லாமல், இதுவரை கிடைத்த தொல் பொருட்களை கொண்டு பிரம்மாண்டமான கீழடி அருங்காட்சியகம் அமைத்திருக்கிறோம்!
உலகம் முழுவதும் இருந்து கீழடி அருங்காட்சியகத்தை பார்ப்பதற்கு தமிழர்கள் வருகிறார்கள். ஆனால், இந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு கீழடி ஆய்வறிக்கை கூட வெளியே வந்துவிடக் கூடாது என்று தமிழ் மீது வெறுப்புடன் நடந்து கொள்கிறார்கள்.
மதுரையில் உலகத் தரத்தில் ஹாக்கி மைதானத்தைத் திறந்து வைத்திருக்கிறோம்! 24 நாடுகள் கலந்து கொள்கின்ற ஜுனியர் ஹாக்கி உலக கோப்பை நம்முடைய மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கின்றது? குஜராத் போன்று, அவர்கள் கட்சி ஆளுகின்ற மாநிலங்களுக்கு விளையாட்டு நிதியை கொட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு என்றால் ஒன்றும் கிடையாது!
விளையாட்டில் மட்டுமல்ல, மதுரையை முக்கிய தொழில் மையமாக உயர்த்துவதற்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி வேலைவாய்ப்பை நாம் கொண்டு வருகிறோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசை சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? நம்முடைய இளைஞர்களை பகோடா விற்க செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். இதுதான் உங்கள் தரம். நம்முடைய இளைஞர்களுக்கு மதுரையில் பெரிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும். நாங்கள் அதற்காக தான் மாட்டுத்தாவணியில், டைடல் பூங்கா அமைக்கிறோம். ஆனால், ஒன்றிய அரசு என்ன செய்கிறார்கள்?
மதுரைக்கு மெட்ரோ ரயில் வேண்டும் என்று நாம் கேட்டால், அதை வேண்டாம் என்று சொல்கிறார்கள். சப்பையான காரணங்களை எல்லாம் சொல்லி, நிராகரிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பா.ஜக. தலைவர்கள் “மதுரைக்கு மெட்ரோ தேவையில்லை” என்று திமிராக வேறு பேசுகிறார்கள். சரி இவர்கள் சொல்கின்ற லாஜிக்படி பார்த்தால், பா.ஜ.க. ஆளுகின்ற வட மாநிலங்களில் இருக்கின்ற பாட்னா, ஆக்ரா, இந்தூர் ஆகியவற்றில் எல்லாம் மெட்ரோ ரயிலுக்கு எப்படி ஒப்புதல் கிடைத்தது? ஏன், எங்கள் மதுரையில் மெட்ரோ ரயில் ஓடக் கூடாதா? மதுரைக்காரர்கள் என்றால், உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?
கடந்த நான்கரை ஆண்டு காலங்களில், மதுரை மாவட்ட மக்களுக்கு மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறோம்.
இதுவரைக்கும் 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான, பத்தாயிரம் வளர்ச்சிப் பணிகள் செய்து தந்திருக்கிறோம். இப்போது, ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 358 வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
மதுரைக்கான ஆறு புதிய அறிவிப்புகளை இங்கே அறிவிக்க நான் விரும்புகிறேன். முதலாவது அறிவிப்பு: மதுரை மாநகரில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பல காலமாக எதிர்பார்க்கப்பட்ட வைகை ஆற்றின் வடகரையில், விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு 130 கோடி ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு: மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான, மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி இருக்கின்ற நான்கு மாசி வீதிகள், வெளி வீதிகள், புதூர், அண்ணா நகர், சந்தைப்பேட்டை, தெற்குவாசல், எஸ்.எஸ்.காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில், இப்போது இருக்கின்ற பழைய பாதாளசாக்கடைக் குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மூன்றாவது அறிவிப்பு: மதுரை கிழக்கு வட்டத்தில் இருக்கின்ற உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில், 7 கோடி ரூபாய் செலவில், தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நான்காவது அறிவிப்பு: மேலூர் வட்டத்தில் இருக்கின்ற, கேசம்பட்டி கிராமம் - பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கண்மாய்கள் 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். மேலும், மேலூர் வட்டம், சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு: மதுரை மேற்கு வட்டத்தில் இருக்கின்ற கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கின்ற பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
ஆறாவது அறிவிப்பு: வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தில், சாத்தையாறு அணை முதல் வைகாசிப்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை, குடுவார்பட்டி முதல் சல்வார்பட்டி வரை இருக்கக்கூடிய சாலை மற்றும் பாலமேடு முதல் வேம்பரலை வரை இருக்கக்கூடிய சாலை ஆகியவை 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் வனத்துறையின் அனுமதி பெற்று அவைகள் மேம்படுத்தப்படும்.
இந்த அறிவிப்புகளை எல்லாம் நான் வெறும் அறிவிப்புகளாக அறிவித்துவிட்டுப் போகிறேன் என்று நினைக்காதீர்கள். இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இப்படி, நம்முடைய சிந்தனை எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி; முன்னேற்றம்தான்! ஆனால், சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான். தேவையில்லாத பிரச்சினையை கிளப்பி, நம்முடைய வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள்.
காலம் காலமாக கார்த்திகை தீபத்துக்கு, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தீபம் ஏற்றுவது போல, கடந்த 3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு, பால தீபம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு, அதேநேரத்தில், உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்திலும் தீபம் ஏற்றி, சாமி புறப்பாடாகி, பதினாறு கால் மண்டபத்திற்கு எதிரே இருக்கும் இடத்தில், சொக்கப்பான் ஏற்றி, சாமிக்கு ரக்ஷை சாத்தப்பட்டது. இவையெல்லாம், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முறையாக நடைபெற்றது. இவை எல்லாம் உள்ளூர் மக்களுக்கும், உண்மையான பக்தர்களுக்கும் நன்றாக தெரியும்! அவர்கள் நல்லபடியாக தரிசனம் செய்துவிட்டு தான் வீட்டிற்குச் சென்றார்கள். ஆனாலும், இப்போது என்ன காரணத்துக்காக பிரச்சினை நடைபெறுகிறது? இந்தப் பிரச்சினையைக் கிளப்புகின்ற கூட்டத்தின் நோக்கம் என்ன? இவையெல்லாமே மக்களுக்கு, நன்றாகவே தெரியும்.
ஆன்மீகம் என்பது, மன அமைதியை, நிம்மதியை தந்து, மக்களை ஒற்றுமையாக இருக்க வைக்கவேண்டும். நான்கு பேருக்கு நன்மை செய்யவேண்டும்! இதுதான் உண்மையான ஆன்மீகமாக இருக்க முடியும்! ஒரு சிலருடைய அரசியல் லாபங்களுக்காக பிரிவுகளையும், பிளவுகளையும் உண்டாக்கி, சமூகத்தை துண்டாடும் சதிச்செயல்கள் நிச்சயமாக ஆன்மீகம் இல்லை! அது அரசியல்! அதிலும் கேடுகெட்ட மலிவான அரசியல்!
தீபம், எங்கே ஏற்றப்பட வேண்டுமோ, எப்போது ஏற்றப்பட வேண்டுமோ, அங்கே வழக்கம்போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டிருக்கிறது! நான் இன்னும் பெருமையோடு பக்தப் பெருமக்களுக்கு சொல்கிறேன். தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்து ஆயிரத்து 490 நாளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.
இப்போது அந்த எண்ணிக்கை இன்னும் கூடியிருக்கும். இப்படிப்பட்ட அரசை, ஆன்மீகத்துக்கு எதிரி என்று சொன்னால், அப்படி சொல்லக் கூடியவர்களுடைய உள்நோக்கம் என்ன என்று, உண்மையான பக்தர்களுக்கு தெளிவாக தெரியும். அறத்தைக் கொண்டாடும் அமைதியான மாநிலமாகதான் தமிழ்நாடு என்றைக்கும் இருக்கும்!
மதுரை மக்களிடம் வளர்ச்சி என்று சொன்னால், வாங்க! வாங்க! என்று வரவேற்பார்கள். அதுவே வன்முறையை தூண்ட கூப்பிட்டால், என்ன செய்வார்கள் தெரியுமா?
மதுரை ஸ்லாங்கில் சொல்ல வேண்டும் என்றால், கலவரக் கும்பலை பொடனிலேயே அடிச்சு ’வெரட்டுவாய்ங்க!’ அமைதியின் பக்கம் நிற்கின்ற, மதுரை மக்களுக்கு நான் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
நம்முடைய எதிரிகள், டெல்லியில் இருந்து நமக்கு எத்தனை இடைஞ்சல்கள் கொடுத்தாலும், நிதி நெருக்கடிகள் ஏற்படுத்தினாலும், ஆளுநர் மூலமாக முட்டுக்கட்டைகள் போட்டாலும், எல்லாவற்றையும் மீறி, இந்தியாவிலேயே நம்பர்-1-ஆக வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்திருக்கிறது!
எங்களுடைய வளர்ச்சிப் பயணத்தை, உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் சதித்திட்டங்கள் எல்லாம் நீங்கள் செய்கிறீர்கள்! நீங்கள் எப்படி பந்து வீசினாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் அது அடிப்பது சிக்சர்தான்! அந்த டீமுக்கு ஏற்றார்போல அடிமைகள் சிக்கலாம். பழைய அடிமைகள், புது அடிமைகளை வைத்து, ‘பி’ டீம், ‘சி’ டீம் உருவாகலாம். ஆனால், கடைசியில் டோர்னமென்ட்டில் சாம்பியன் நாங்கள் தான்!
வருகின்ற 15-ஆம் தேதியில் இருந்து, ஏற்கனவே, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனடைகின்ற ஒரு கோடியே 14 இலட்சம் மகளிரோடு சேர்த்து, விடுபட்ட தகுதியான மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப் போகிறோம்.
இங்கே திரண்டிருக்கின்ற, மதுரை மக்கள் மீதான நம்பிக்கையில் சொல்கின்றேன். அனைத்து மதத்தினரும், அங்காளி, பங்காளியாக பழகுகின்ற, பாசக்கார மதுரை மண்ணிலிருந்து உறுதியாக சொல்கின்றேன். எங்கள் தமிழ்நாட்டில், என்றைக்கும் பெரியார் ஏற்றிய, சமத்துவ தீபம்தான் ஒளிரும்! உங்களால் அதை தடுக்க முடியாது! “எதிர்த்துக் கேட்க ஆள் இருக்கிறது! உள்ளே பெரியார் ஏற்றிய நெருப்பிருக்கிறது. 2026-லும் அதே ஃபயருடன், திராவிட மாடல் அரசுதான் தொடரும்’ எனத் தெரிவித்தார்.