

வானதி சீனிவாசன்| கோப்புப் படம்
சென்னை: “அரசு கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்கள் தகுதித் தேர்வில் சிலரின் மதிப்பெண்கள் நீலம் மற்றும் மஞ்சள் வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மாபெரும் முறைகேடுகளுக்கான அறிகுறிகளாக தெரிகின்றன. வண்ணக் குறியீடு மூலம் அரசு வேலையை விலை பேசுகிறதா ஜோசப் விஜய் அரசு?” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழக அரசு நடத்திய தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், சிலரின் மதிப்பெண்களில் நீலம் மற்றும் மஞ்சள் வண்ணத்தில் குறியீடுகள் உள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
அதாவது, முதல் தாளில் நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு இரண்டாம் தாளில் 0 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன, முதற்கட்ட தேர்வு முடிவுகள் படி 0 மதிப்பெண்கள் பெற்றவருக்கு பின்பு 15 ஆக திருத்தம் செய்யப்பட்டுள்ளது, தற்போது குறிப்பிட்ட சிலரின் மதிப்பெண்கள் மட்டும் வேறு நிறங்களில் “நோட்” செய்யப்பட்டிருக்கிறது.
இவையெல்லாம் தற்செயலானவையாகத் தெரியவில்லை. மாபெரும் முறைகேடுகளுக்கான அறிகுறிகளாகவே தெரிகின்றன. அதிலும் குறிப்பாக மக்களின் உழைப்பை சுரண்டுவதில் பெயர்போன காங்கிரஸாரின் கைவசம் உள்ள இத்துறையில், இத்தனை குளறுபடிகள் தொடர்ந்து நடப்பதை நாம் எளிதாக கடந்துவிட முடியாது.
எனவே, ஊழலுக்கு எதிரானவர்களாக தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் முதல்வர் விஜய், அரசு கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் நடக்கும் குழப்பங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கமளிக்க வேண்டும். அரசு வேலையை நம்பி காத்திருக்கும் தகுதியுள்ள பட்டதாரிகளின் கனவுகள் நனவாவதை உறுதி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.