

சென்னை: சபரிமலை தங்கத் தகடு திருட்டு வழக்கு தொடர்பாக தமிழகம், கேரளா உள்ளிட்ட 21 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
சபரிமலை கோயிலில் சுமார் 4 கிலோ தங்கம் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் இதுவரை உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் வாசு, பத்மகுமார், நிர்வாக அதிகாரிகள் முராரி பாபு, சுதீஷ்குமார் மற்றும் தந்திரி கண்டரரு ராஜீவரரு, சென்னை நகை தயாரிப்பு நிறுவன சிஇஓ பங்கஜ் பண்டாரி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தங்கத் தகடு திருட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையும் விசாரித்தது. அதன்படி, இந்த விவகாரத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 21 இடங்களில் அமலாக்கத் துறை நேற்று சோதனையில் ஈடுபட்டது.
சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை, வேப்பேரி, சவுக்கார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.