

சென்னை: சென்னையில் வணிக காஸ் சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தங்கும் விடுதிகளின் (ஹாஸ்டல், பிஜி) வாடகையை அவற்றின் உரிமையாளர்கள் 10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்கள், வேலைக்கு வரும் இளைஞர்கள் ஹாஸ்டல், பிஜி போன்ற தங்கும் விடுதிகளில் தங்கி தங்களது படிப்பையும், வேலையையும் தொடர்கின்றனர்.
அந்த வகையில் சென்னையில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதிகள் இயங்கி வருகின்றன. அதில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வணிக காஸ் சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்ந்ததால், விடுதிகளின் வாடகை 10 சதவீதம் வரை உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஐடி விடுதி மற்றும் பிஜி உரிமையாளர்கள் நலச் சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையில், “அமெரிக்கா - ஈரான் போர் காரண மாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.1,899 ஆக இருந்த 19 கிலோ வணிக காஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.3,258 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் சமையல் செலவுகள் கட்டுப்படியாகாததால், சென்னையில் ஹாஸ்டல், பிஜி வாடகை 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது. அதன்படி ஏசி இல்லாத தங்குமிடத்துக்கான மாதாந்திர கட்டணம், 4 பேர் தங்கும் அறைகளுக்கு ரூ.6,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் 3 பேர் தங்கும் அறைகளுக்கு ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.8 ஆயிரமாகவும், 2 பேர் தங்கும் அறைகளுக்கு ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.9 ஆயிரமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இவை அடிப்படை விலைகள்தான், இருப்பிடம் மற்றும் வசதிகளுக்கு ஏற்ப வாடகை மாறுபடலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள விவரங்களின்படி, விடுதிகளின் வாடகை வரும் 5-ம் தேதி (நாளை) முதல் அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
ஏஜென்சிகளிடம் பெரும்பாலும் சிலிண்டர்கள் கிடைக்காததால், கள்ளச் சந்தையில் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை கொடுத்தே சிலிண்டர்களை பெற வேண்டியிருப்பதால் தங்கும் விடுதிகளின் வாடகையை கூட்டுவதற்கான தேவை ஏற்பட்டிருப்பதாக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் விடுதிகளின் வாடகை அதிகரிப்பு இளைஞர்கள், மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.