

உயர்நிலைக் குழு, சிபிசிஐடி போலீஸார் விசாரணை காரணமாக பத்திரப் பதிவுக்காக காத்திருக்கும் பொதுமக்கள்
பழநி: பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலப்பதிவு முறைகேடு தொடர்பாக, பதிவுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழு இன்று பழநி பதிவுத் துறை அலுவலகத்தில் விசாரணையை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், நிலத்தை வாங்கியவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
மேலும், தலைமறைவாக உள்ள இந்த நிலத்தை விற்ற தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையை சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளைத் துரை மற்றும் சேதுபதி ஆகிய 3 பேரையும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
நேற்று (ஜூலை 19) சட்டவிரோதமாக நிலத்தை விற்ற விழுப்புரத்தில் உள்ள முருகதாஸ் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்த சென்றனர். அப்போது, வீடு பூட்டியிருந்ததால் விழுப்புரம் போலீஸார் உதவியுடன் முருகதாஸ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸார் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கில் முக்கியமான குற்றவாளி என்பதால் முருகதாஸ் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனிடையே, இன்று (ஜூலை 20) திங்கட்கிழமை காலை நிலப்பதிவு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, பதிவுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழுவினர் பழநி பதிவாளர் அலுவலகத்துக்கு தனித்தனி காரில் வந்தனர்.
கூடுதல் பதிவுத் துறைத் தலைவர் சுதா மல்யா, உதவி பதிவுத் துறைத் தலைவர் பூங்கொடி, மாவட்டப் பதிவாளர் கண்ணன் ஆகிய 3 பேரும் மாவட்ட பதிவாளர் (தணிக்கை) செல்வகுமார் மற்றும் அலுவலக பணியாளர் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, 5-வது நாளாக சிபிசிஐடி போலீஸாரும் விசாரணை நடத்துவதற்காக காலை 9.30 மணிக்கே அலுவலகத்துக்கு வந்து, தேவையான ஆவணங்களை சேகரித்துள்ளனர். உயர்நிலைக் குழு, சிபிசிஐடி போலீஸார் விசாரணை காரணமாக பத்திரப் பதிவுக்காக வந்திருந்த பொதுமக்கள் வெளியே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.