‘வந்தே மாதரம்’ சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

‘வந்தே மாதரம்’ சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

சென்னை: அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய முதல்வராக விஜய் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி மே 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்டு, மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்கும் மரபை மீட்டெடுக்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ‘1891-ஆம் ஆண்டு தமிழறிஞர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியே தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் துவங்கப்படுவதும், நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் பாடி நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது.

அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே துவங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி பிறப்பித்த சுற்றிக்கையில், மாநில பாடலை பாடி அரசு நிகழ்ச்சியை துவங்க எந்த தடையையும் விதிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வெறும் சடங்குக்கு அல்ல, அது தமிழர்களின் உணர்வு, கலாச்சாரம் மற்றும் அடையாளமாக உள்ளது. பல தலைமுறைகளாக அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியே துவங்கப்பட்டுள்ளது.

வந்தே மாதரத்துக்கு எதிராகவோ, தேசிய கீதத்துக்கு எதிராகவோ இந்த வழக்கை தொடரவில்லை. எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாச்சார மோதலை தவிர்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க வேண்டும்’ என அரசுக்கு உத்தரவிடும்படி கோரியிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, ‘மத்திய அரசின் சுற்றறிக்கை தமிழகத்துக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்ற நிலையில் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யாமல் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்று மத்திய அரசு சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வைத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், மனுவை திரும்பப் பெறவும், சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடரவும் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

‘வந்தே மாதரம்’ சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
தவெக - காங்கிரஸ் கூட்டணியின் சூத்திரதாரி: யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in