

சென்னை: ‘தெருநாய் பிரச்சினையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை’ என தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தெருநாய்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக பிடிக்கப்படும் நாய்களை மீண்டும் அதே பகுதிகளில் விடாமல், பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் போதுமான இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும், தடுப்பூசி மையங்களில் போதுமான கால்நடை மருத்துவர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தயாராக இருப்பதாகவும், அதனை தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வேண்டும் எனவும் தமிழக அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்று, அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூலை 30-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், ‘தெருநாய்க் கடி சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன. பெரும்பாலும் குழந்தைகள்தான் தெருநாய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மாதந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டியுள்ளது’ எனத் தெரிவித்தனர்.
மேலும், ‘தெருநாய்கள் பிரச்சினையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை’ என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ‘சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது’ எனக் குறிப்பிட்டனர்.
தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘அரசின் அறிக்கையில் வேண்டுமானால் நடவடிக்கை குறித்த விவரங்கள் இருக்கலாம். ஆனால், நேரில் எதுவும் தெரியவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ எனவும் குறிப்பிட்டனர்.