

கோப்புப்படம்
சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையைக் கடக்கும் நிலையில், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று (ஜன. 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், இலங்கை மட்டகளப்புக்கு தென்கிழக்கே சுமார் 170 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது, மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், திரிகோணமலை, யாழ்ப்பாணம் இடையே இன்று பிற்பகல் அல்லது மாலை கரையை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக இன்று (ஜன.10) கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் உள் தமிழகத்தில் சில இடங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வரும் 12-ம் தேதி தமிழகத்தில் சில இடங்களிலும், 13 முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை சென்னை, செங்கை, திருவள்ளூர், காஞ்சி ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.