

கிருஷ்ணவேணி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தவெக சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், திரைப்பட பாடலுக்கு நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர், சங்கரநாதர் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். மேலும், வெள்ளைத்தேவன்விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பொறுப்பு தலைமை ஆசிரியையாகவும் இருந்தார்.
இந்நிலையில், ஒரத்தநாட்டில் தவெக சார்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட கிருஷ்ணவேணி, மேடையில், விஜய் நடித்த சிவகாசி திரைப்படத்தில் இடம் பெற்ற, ‘கோடம்பாக்கம் ஏரியா’ என்ற பாடலுக்கு நடனமாடினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளுக்கு சென்ற புகாரின் அடிப்படையில், பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் விசாரணை நடத்தி, நன்னடத்தை விதியை மீறி, அரசியல் கட்சி விழாவில் கலந்துகொண்டு நடனமாடியதற்காக, கிருஷ்ணவேணியை ‘சஸ்பெண்ட்’ செய்து மார்ச் 24-ம் தேதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கூறியதாவது: நாங்கள் ஆண்டுதோறும் மகளிர் விழா நடத்துவது வழக்கம். அதேபோல, தவெக மகளிர் தினவிழா நடத்திய தனியார் மண்டபத்தில், அவர்களின் விழா முடிந்தவுடன், நாங்கள் ஏற்பாடு செய்த மகளிர் தின விழாவை நடத்தினோம்.
அப்போது, அங்கிருந்த தவெக பிளக்ஸ் பேனர் அகற்றப்படாமல் இருந்தது. நான் அதை அகற்றுமாறு கேட்டுகொண்டும் பேனரை அகற்ற நேரமாகும் என்பதால், விட்டு விட்டனர். இதனால், நான் தவெக நிகழ்ச்சியில் ஆடியதாக ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளனர். இதுதொடர்பாக எனது வழக்கறிஞரிடம் பேசி விளக்கம் அளிக்க உள்ளேன் என்றார்.