சென்னை: அதிக குளிர் காரணமாக முதியோருக்கு ‘முகவாதம்’ ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசு மருத்துவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் அ.ப.பரூக் அப்துல்லா கூறியதாவது: முகத்துக்கு உணர்வு அளிக்கும் நரம்பில் ஏற்படும் அழுத்தம், அழற்சி, வைரஸ் தொற்று ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சினைதான் முக வாதம் எனப்படுகிறது.
எனவே குளிர்ந்த தரையில், பாய், தலையணை உள்ளிட்ட விரிப்பு இல்லாமல் படுப்பதையும், ஒரு பக்க கன்னத்தை நேரடியாக குளிர்ந்த தரையில் வைத்துப் படுப்பதையும் முதியவர்கள் தவிர்க்க வேண்டும்.
நேரடியாக முகத்தை தரையில் வைத்து படுப்பதன் வாயிலாக, முக நரம்பு அழுத்தப்பட்டு முகவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் கார், பேருந்து, ரயில் பயணங்களில் அதிக நேரம் குளிர்ந்த காற்று காது, கன்னத்தில் படுமாறு பயணித்தாலும், முகவாதத்தை ஏற்படுத்தும்.
‘ஏசி’ பயன்பாடாக இருந்தாலும் நேரடியாக குளிர்ந்த காற்று முகத்தில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இப்பாதிப்பில் கண்கள் திறந்தே இருக்கும் என்பதால், வறண்டு விடாமல் இருக்க சொட்டு மருந்து பயன்படுத்தலாம்.
மேலும் பகலில் கண்ணாடியும், இரவில் மூடு கவசமும் அணியலாம். திரவ, திட உணவாக இல்லாமல், கரைத்த கஞ்சியாக உட்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.