சென்னை: வடகிழக்குப் பருவமழையால், கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களில் நீர் நிறைந்துள்ளதை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் 160.86 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை அரசு கையகப்படுத்திஉள்ளது. இதில், 118 ஏக்கரில் ஒரு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த சுற்றுச்சூழல் பூங்காவில், மழை நீர் சேமிக்கும் வகையில் புதிதாக 4 குளங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஏற்கெனவே இந்த மைதானத்தில் 2 பெரிய குளங்கள் இருந்தன. அவை தூர்வாரி அகலப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில், 24.50 கோடி லிட்டர் மழை நீரை சேர்த்து வைக்கக்கூடிய அளவுக்கு 6 குளங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. வேளச்சேரி பெருங்குடி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீர்ப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு இருந்த உபரி நிலங்களில் 3.50 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு பெரிய குளங்கள் வெட்டப்பட்டன. அங்கு 4.25 கோடி லிட்டர் மழைநீர் தேக்கி வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண காய்ச்சல் போன்ற பாதிப்புகள் மட்டுமே உள்ளன. தொற்று நோய் பாதிப்புகள் இல்லை. தேவையான இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம்.
அக்.16-ம் தேதி முதல் இதுவரை நடமாடும் வாகனங்கள், மருத்துவக் குழுக்கள் மூலமாக 59,911 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.