

சென்னை: மின் இணைப்பு வேண்டி காத்திருக்கும் விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் இணைப்பு வழங்க விண்ணப்பிக்க மேலும் கால அவகாசத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு கடந்த 16.12.2025 அன்று தமிழகத்தில் இலவச மின்சாரம் வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் விவசாயிகள் தட்கல் திட்டத்தில் இணைப்பு வேண்டுமானால் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டது.
இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்படும் என்று காலக்கெடு எதுவும் குறிப்பிடாமல் அறிவித்து இருந்தது. ஆனால் அறிவிப்பு வெளியான இரண்டு தினங்களில் அதாவது 18.12.2025 மதியம் 2 மணியுடன் இத்திட்டம் நிறைவுப் பெற்றுவிட்டதாக விண்ணப்பம் பெறுவதை நிறுத்திவிட்டார்கள்.
பல லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் போது 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்குவதாக அறிவித்துவிட்டு எந்த முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது நம்பிக்கையோடு காத்திருந்த விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.
தமிழக விவசாயிகள் பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு இடையில் நஷ்டம் ஏற்பட்டாலும் தொடர்ந்து விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும். அதோடு குறைந்த பட்சம் 50 ஆயிரம் விவசாயிகளுக்காவது இத்திட்டத்தின் மூலம் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.