

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஏப்.23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”மரத்வாடா முதல் மன்னார் வளைகுடா வரை உள் கர்நாடகா, ராயல சீமா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 900 மீட்டர் உயரத்தில், ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக நாளை (ஏப்.18) முதல் 21-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
ஏப்.22, 23 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்.18 (நாளை) முதல் ஏப்.21-ம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்ப நிலை ஒரு சில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஏப்.18) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 99 டிகிரி, குறைந்த பட்ச வெப்ப நிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.