

செங்கல்பட்டு: புதுச்சேரியில் இருந்து சென்னையை நோக்கி யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் காரில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பயணம் செய்தபோது, மாமல்லபுரம் அருகே கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அவரது தோழி பவானி செட்டி உயிரிழந்தார். மேலும், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுதொடர்பாக மாமல்லபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று செங்கை மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி சசிகலா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது எதிர் மனுதாரரான நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் ஆஜராகாததற்கான மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு (Framing of Charges) மற்றும் அதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
அன்றைய தினம் வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.