

ஆட்சிமாற்றம் காரணமாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் அமைச்சர்களின் அறைகள் காலி செய்யப்பட்டு பொருட்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன. | படங்கள்: ம.பிரபு |
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று, நாளை முதல்வராக விஜய் பதவியேற்க உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் தங்கள் அலுவலக அறைகளில் உள்ள பொருட்களை முன்னாள் அமைச்சர்கள் காலி செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க உள்ளது. விஜய் நாளை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்வில் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று ஆளுநர் அர்லேகரை விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகம் மிகவும் பரபரப்பாக இயங்கியது.
ஒரு பக்கம் தலைமைச்செயலர் சாய்குமார் தலைமையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை நடைபெற்று வந்தது. மற்றொருபுறம், அமைச்சர்கள் அறைகளை காலி செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது.
அறைகளில் உள்ள முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி படங்கள், அமைச்சர்கள் பயன்படுத்திய பொருட்கள் என அனைத்தும் காலி செய்யப்பட்டு பெட்டிகளில் அடைத்து அவரவர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டன. அலுவலக கோப்புகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அறைகள் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.