

படங்கள்: ஆர்.ரகு
'தி இந்து' குழுமம் சார்பில், 'லிட் ஃபார் லைஃப் இலக்கியத் திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 14-வது ஆண்டு இலக் கியத் திருவிழா சென்னை சேத்துப் பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான இலக்கிய ஆர்வலர்கள், இளைஞர்கள். பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.
'தி இந்து' குழுமத்தின் தலைவரும், 'லிட் ஃபார் லைஃப்' திருவிழாவின் இயக்குநருமான மூத்த பத்திரிகையாளர் டாக்டர் நிர்மலா லக்ஷ்மண் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, “ஜனநாயக விழுமியங்கள், சமூக உள்ளடக்கம், நீதி, உண்மை, கருத்துரிமையை நிலை நாட்டுவதில் உறுதிப்பாடு ஆகிய வற்றை கடைப்பிடிப்பதே 'தி இந்துவின் பாரம்பரியம் ஆகும். நேர்மையும், அஞ்சாமையும் நிறைந்த இந்த பாரம் பரியத்தை அடித்தளமாகக் கொண்டு தான் லிட் ஃபார் லைஃப்' விழா முன்னெடுக்கப்படுகிறது.
மாற்றுக் கருத்து உடையவர்கள், குரலற்றவர்களின் குரல்களை இதுபோன்ற திருவிழாக்கள் கொண்டாட வேண்டும். சுதந்திரமும், மனிதமும் கொண்டாடப்படும் இடமாக இது திகழ வேண்டும். இளம் வாசகர்களையும் ஊக்குவிக்கும் வகையில், அடுத்த ஆண்டு முதல் சிறிய அளவில் சிறார் இலக்கியத் திருவிழாவையும் இதனுடன் சேர்த்து நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
பின்னர், பிரபல பிரிட்டிஷ் தத்துவ அறிஞரும் எழுத்தாளருமான ஏ.சி.கிரேலிங், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் தொடக்க உரை ஆற்றினர். 'தி இந்து குழும இயக்குநர்கள் என்.ராம். என்.ரவி, என்.முரளி, 'தி இந்து' ஆங்கில நாளிதழ் ஆசிரியர் சுரேஷ் நம்பத். தலைமை செயல் அதிகாரி நவநீத், தலைமை வருவாய் அதிகாரி சுரேஷ் பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளின் கருத்தமர்வுகள் தொடங்கின. முதல் அமர்வில், இந்திய அரசமைப்பின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்றார். அவருடன் 'இந்து' என்.ரவி கலந்துரையாடினார்.
ஜாமீன் மறுக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள உமர் காலித் போன்றோரின் நிலை, இணையத்தில் கருத்து சுதந்திரம், சமூக ஊடகங்களுக்கான ஒழுங்கு முறை. தேர்தல் பத்திரம் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக என்.ரவி எழுப்பிய கேள்விகளுக்கு சந்திரசூட் விளக்கம் அளித்தார்.
தேர்தல் பத்திரங்கள் குறித்து அவர் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தில் 70 ஆயிரம் வழக்குகள் குவிந்துள்ளன. ஆனால், விசாரணைக்கு 34 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். நெடுங்காலமாக கிடப்பில் போடப்பட்ட வழக்கை விசாரித்தாலும் சர்ச்சையாகிறது, புதிதாக வந்த வழக்கை விரைந்து விசாரித்தாலும் சர்ச்சையாகிறது.
கடந்த 1966-ல் இருந்து அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட்கள் நன்கொடை வழங்குகின்றன. இந்தியாவில் இது சட்ட விரோதம் அல்ல. அதே நேரம். பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும் தேர்தல் பத்திர நடைமுறையை அனுமதிப்பது அரசியல் ஊழலுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கை ஆகிவிடும். எனவே தான், அந்த சட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திட்டம் தான் ரத்து செய்யப்பட்டுள்ளதே தவிர, கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடை வழங்கும் முறை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
படங்கள்: ஆர்.ரகு
பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வழங்கிய 500-க்கும் அதிக மான தீர்ப்புகள் குறித்து தான் 683 பக்கங்களில் எழுதி, பென்குயின் ராண்டம் ஹவுஸ் இந்தியா பதிப்பகம் வெளியிட்ட 'Why The Constitution Matters' என்ற நூலில் வாசகர்களுக்கு கையெழுத்திட்டு, அவர்களுடன் உரையாடினார்.
இலக்கியத் திருவிழாவின் 2-ம் நாளான இன்று பிரபல எழுத்தாளர்கள் கோபாலகிருஷ்ண காந்தி, பானு முஷ்டாக், கிரண் தேசாய், ஏ.ஆர்.வெங்கடாசலபதி, ஷோபா டே, சசி தரூர் எம்.பி., கர்னாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா, செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோரின் கருத்தமர்வுகள் நடைபெறுகின்றன.