

பாலக்கோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல் உதவி ஆய்வாளரின் கையை கடித்த தவெக உறுப்பினர்.
தருமபுரி: பாலக்கோட்டில் தவெக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல் உதவி ஆய்வாளரின் கையை கடித்தவர் உட்பட கட்சியினர் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் திறக்கப்பட்ட தனியார் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி தவெக சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் சிவா தலைமை வகித்தார். அப்போது, போலீஸாரின் தடையை மீறி கட்சியினர் மனமகிழ் மன்ற வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் தடுக்க முயன்றபோது தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அப்போது ஒரு இளைஞர் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் கையைக் கடித்துவிட்டு முன்னேறி உள்ளே செல்ல முயன்றார். அதைத் தொடர்ந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீஸார் கைது செய்து அன்று மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில், உதவி ஆய்வாளரின் கையைக் கடித்த இளைஞரான பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் வீராசனூரைச் சேர்ந்த ஜெமினி (26) மற்றும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட பாப்பிநாயக்கன அள்ளி ஜெயப்பிரகாஷ் (25), பூச்செட்டி அள்ளியைச் சேர்ந்த கணேசன் (42), கிருஷ்ணன் (45), வீராசனூர் வினோத்குமார் (35) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் மீது, போலீஸாரை தாக்கி, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.