“விவசாயிகள் நலனில் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு...” - முதல்வர் விஜய் மீது தினகரன் சாடல்

டிடிவி. தினகரன் | கோப்புப்படம்
டிடிவி. தினகரன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ‘தலைமைச் செயலகத்தின் முன் போராடி கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சட்டப்பேரவையில் முதல்வர் தன்னை விவசாயிகளின் காவலராக முன்னிறுத்த முயன்ற அதே நேரத்தில் தலைமைச் செயலகத்தின் முன் போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர். தவெக அளித்த தேர்தல் அறிக்கையின்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும்.

தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பாக போராட முயன்ற விவசாயிகள், காவல் துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

காவிரி நீர் நமது உயிர் ஆதாரம் என்றும் அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளியளவும் இல்லை என தன்னை விவசாயிகளின் காவலர் என காட்டிக் கொள்வது போல முதல்வர் ஜோசப் விஜய் சட்டப்பேரவைக்குள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில், சட்டப்பேரவைக்கு வெளியே ஜனநாயக ரீதியில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரை வைத்து அடக்கி ஒடுக்கியிருப்பது, விவசாயிகள் நலனில் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு, அரசின் கவனத்தை ஈர்க்க சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் பயிர்க்கடன் தொடர்பான அறிவிப்பு இல்லாமல் ஏமாற்றப்பட்ட விவசாயிகள், வாழ்வாதாரத்திற்கு வேறு வழியின்றி தலைமைச் செயலகத்தையே முற்றுகையிட்டு போராடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்

டிடிவி. தினகரன் | கோப்புப்படம்
கர்நாடகா செல்ல முடிவெடுத்தது ஏன்? - உதயநிதி கேள்விக்கு முதல்வர் விஜய் பதில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in