“தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்” - எடப்பாடி பழனிசாமி

“தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்” - எடப்பாடி பழனிசாமி
Updated on
2 min read

சென்னை: ‘தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நடைபெற்று முடிந்த 17-வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நீடிக்கும் நிலையில், பழனிசாமியின் இந்தப் பதிவு ஒரு ‘சிக்னல்’ ஆக கருதப்படுகிறது.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள விஜய், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில், காங்கிரஸ் ஆதரவு மூலம் தவெக பலம் 112 ஆக உயர்ந்தது.

இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் அர்லேகரை சந்தித்து, விஜய் கடிதம் வழங்கினார். ஆனால், ‘ஆட்சி அமைக்கத் தேவையான 118 உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உறுதிபடத் தெரிவித்தார். பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் தலைவர்களை தவெக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு கோரினர்.

இதன் தொடர்ச்சியாக, தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வந்த இடதுசாரி கட்சிகள், இறுதியில் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக நேற்று அறிவித்தன. இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிடிஆர். நிர்மல்குமாரிடம் அக்கட்சித் தலைவர்கள் வழங்கினர். இதன்மூலம் தவெக பலம் 116 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே ஐயூஎம்எல் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அக்கட்சி இதற்கு மறுப்பு தெரிவித்தது. அதேபோல், விசிக தலைவர் திருமாவளவனுடனும் தவெகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இடதுசாரி தலைவர்கள் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான தனது முடிவை இன்று மாலை தெரிவிக்கவுள்ளார் திருமாவளவன்.

முன்னதாக, நேற்று மாலை 7 மணி அளவில் ஆளுநர் மாளிகை சென்ற விஜய், ஆளுநர் அர்லேகரை 3-வது முறையாக சந்தித்து, எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை வழங்கினார். அதன்பின்னர், தியாகராய நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் அலுவலகங்களுக்கு சென்ற விஜய், அங்கு அக்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தவெகவுக்கு பெரும்பான்மைக்கான 118 இடங்கள் கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரிடம் இருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை. திருமாவளவன் தனது முடிவை இன்று மாலை அறிவிக்க உள்ளார். அதன் பிறகு, தவெகவுக்கு பெரும்பான்மைக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு உறுதி செய்யப்பட்ட பிறகே, ஆளுநரிடம் இருந்து அழைப்பு வரும் என்று தெரிகிறது.

இதனிடையே, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான காய்நகர்த்தல்களை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் பரவி வந்தன. இப்பின்னணியில் புதிதாக அமையவுள்ள ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

“தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்” - எடப்பாடி பழனிசாமி
”விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கே பேரழிவு” - டிடிவி தினகரன் காட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in