

பெருந்துறை பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி.
மக்களை ஏமாற்றிய திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது, என பெருந்துறையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி பேசினார்.
சட்டப்பேரவை தொகுதி வாரியாக, அதிமுக சார்பில் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்றுப் பேசியதாவது: இன்னும் 8 நாட்களில் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும். அடுத்த மாதம் தேர்தலே வந்துவிடும். பெருந்துறை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், “அதிமுக-வை பாஜக விழுங்கிவிடும், அதிமுக அழிந்துவிடும்” எனப் பேசியுள்ளார். அதிமுக-வை எந்தக் கொம்பன் நினைத்தாலும் அழிக்க முடியாது. அதே கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “அதிமுக-வில் மரியாதை இல்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நேரத்தில், அதிமுக-வுக்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பன்னீர்செல்வம். ‘கேடு நினைப்பவன் கெடுவான்’ என்பதற்கு ஏற்ப அவராகவே வீழ்ந்துவிட்டார். ஜெயலலிதா சிறை சென்றபோது, ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி முதல்வராக்கினார்.
அவருக்கு அடையாளம் கொடுத்தது அதிமுக. திமுக-வை விரட்ட வேண்டும் என நினைத்து எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக-வில் இருந்து வெளியேறி, திமுக-வுடனேயே சேர்ந்துவிட்டார் ஓபிஎஸ். திமுக-வின் ‘பி டீம்’ ஆக அவர் மாறிவிட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா அவரை விரட்டிவிட்டது. தற்போது அதிமுக தூய்மையான இயக்கமாகிவிட்டது.
சாதாரண தொண்டனும் நன்கு உழைத்தால் அதிமுக-வில் உயர் பதவிக்கு வரலாம். ஓபிஎஸ் புகுந்த கட்சியும் ஆமை புகுந்த வீடும் ஒன்று. சுயநலவாதிகள் இணைந்த திமுக கட்சி அழியும். திமுக-வின் அழிவுக்கு செந்தில்பாலாஜியே காரணமாக இருப்பார். 453 நாட்கள் சிறையில் இருந்த அவர், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள யாரை வேண்டுமானாலும் காட்டிக் கொடுப்பார். எனவே, ஸ்டாலின் திமுக-வை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
பாஜக-வுக்கு அதிமுக அடிமையாக இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் உண்மையில், காங்கிரஸ் கட்சிக்குத் தான் திமுக அடிமையாக உள்ளது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பதை ஸ்டாலின் பார்ப்பார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், குடும்ப அட்டைக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மாற்றத்திறனாளிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அம்மா கிளினிக் மீண்டும் திறக்கப்படும்.
கைத்தறிக்கு தற்போது மாதம் 300 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 450 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும். அதேபோல விசைத்தறிக்கு தற்போது மாதம் 1,000 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 1,400 யூனிட்டாக வழங்கப்படும்.
பெருந்துறை பகுதியில் சிப்காட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களை ஏமாற்றிய திமுக ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதே மக்களின் எண்ணம். எனவே, இங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.