

சென்னை: மெரினா கடலில் குளிக்கும் போது, அலையில் இழுத்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த அண்ணனின் உடல் கரை ஒதுங்கியது.
ஆவடி, கோவில்பதாகையைச் சேர்ந்தவர் தேவகி. இவர், கடந்த 22-ம் தேதி மகன்கள் சுதர்சன் (16), கமலேஷ் (15) ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். கண்ணகி சிலை பின்புறமுள்ள கடலில் சகோதரர்கள் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் தம்பி கமலேஷ் சிக்கி உள்ளார். இதனைக் கண்ட அண்ணன் சுதர்சன், தம்பி கையைப் பிடித்து இழுத்து காப்பாற்றிய நிலையில், எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து, மெரினா போலீஸார் சம்பவ இடம் விரைந்து சுதர்சனை தேடினர். மேலும், மீனவர்கள் உதவியுடன் படகில் சென்றும் தேடுதல் பணி நடந்தது. கடலோர காவல் குழுமத்தினரும் தேடினர்.
இந்நிலையில், சிறுவனின் உடல் நேற்றுமுன்தினம் இரவு துறைமுகம் பகுதியில் கரை ஒதுங்கியது. போலீஸார், உடலை பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.