

சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் நிலவும் வெப்ப அலை மற்றும் அதிக வெப்பநிலைச் சூழல்களால் மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் நலனை உறுதிசெய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கடுமையான வெப்ப அலை என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டால், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை முன்னிறுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு போதிய குடிநீர் வசதி, நிழலான ஓய்விட வசதி உட்பட வெப்ப அலைக்கான பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பின்பற்றப்படுவதை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதிசெய்ய வேண்டும்.