

“காட்பாடி தொகுதியில் நான் நிற்பதாகப் பெருமை பேசினார்கள். அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். யாருடைய பெயரை தலைவர் உச்சரிக்கிறாரோ அதன் பிறகுதான் அவர் தகுதியுடைய வேட்பாளர் ஆவார்” என்று அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தேர்தல் அலுவலகத்தை திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் திறந்து வைத்தார். முன்னதாக, வேலூர் வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் நரசிம்மன் மற்றும் வேலூர் எம்எல்ஏ-வான கார்த்திகேயன் ஆகியோர், “காட்பாடி தொகுதியில் மீண்டும் அமைச்சர் துரைமுருகன் தான் போட்டியிட உள்ளார். அவரே மீண்டும் வெற்றி பெறுவார். கருணாநிதிக்குப் பிறகு அதிக முறை சட்டப்பேரவையில் உறுப்பினராக இருப்பவர் துரைமுருகன். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றனர்.
இதனைத் தொடர்ந்து, துரைமுருகன் பேசும்போது, ‘‘இங்கே பேசிய பொருளாளர் நரசிம்மன் மற்றும் வேலூர் எம்எல்ஏ ஆகியோர் காட்பாடி தொகுதியில் நான் நிற்பதாகப் பெருமை பேசினார்கள். அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். யாருடைய பெயரை தலைவர் உச்சரிக்கிறாரோ அதன் பிறகுதான் அவர் தகுதியுடைய வேட்பாளர் ஆவார். அதற்கு முன்பு நாமே ஏதோ ஒரு பெயரைச் சொல்லி, இவர் தான் வேட்பாளர். இவர் தான் வருவார் எனப் பேசுவது உங்களுக்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். அதை கேட்டுக் கொண்டிருக்கக் கூடிய எனக்கு அசவுகரியமாக இருக்கிறது.
கழகத்தின் அதிகாரபூர்வ வேட்பாளர் அறிவிக்கப்படும் வரை நான் ஒரு எம்எல்ஏ அவ்வளவு தான். யாரை தலைவர் முடிவு செய்தாலும் அதை ஏற்று பணியாற்றுவதற்குத் தான் ஆயிரக்கணக்கான செயல்வீரர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களோடு நானும் கலந்து கொள்வேன் என்ற உறுதியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் நெருங்குவதால் ஒவ்வொரு கட்சி தலைமையிலும் பிஸியாக இருக்கிறார்கள். தேர்தல் பணிகளை தலைவர் இரவு 12 மணி வரை கவனித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கட்சியாக அழைத்து நமது தலைவர் சாதுர்யமாக பேசி அனுப்பி வைப்பதைப் பார்த்து நான் வியக்கிறேன். அரசியலில் அவர் காட்டுகிற நிதானமும், தொண்டரிடத்தில் காட்டுகின்ற அக்கறையும் இயக்கத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
அகில இந்திய கட்சிகள் யாராக இருந்தாலும் சொல்கிறேன், அவர்களால் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியவில்லை. ஆனால், கமுக்கமாகவே இருந்து முடிவெடுத்து ஒரு பெரிய கூட்டணியை அமைத்து வெற்றிகரமாகச் செயல்பட்டிருப்பவர் தளபதி தான். இந்த முயற்சி நிச்சயம் வெற்றி தரும். அவர் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்பதை உறுதியாகச் சொல்லிவிட்டுச் செல்கிறேன். எனவே, வரும் 30-ம் தேதிக்குப் பிறகு அரசியலில் மற்றதை எல்லாம் பேசலாம். அதுவரை நானும் பேசக்கூடாது’’ என்றார்.