

கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஜனவரி 22-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவ வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்கு பருவமழை அடுத்த ஓரிரு நாட்களில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை (ஜன.17) முதல் ஜனவரி 22-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) வழக்கமான அளவை ஒட்டி இருக்கக் கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) அளவுகளின்படி அதிகபட்சமாக சமவெளிப்பகுதியான தருமபுரியில் 18.5 டிகிரி, மலைப்பகுதியான கொடைக்கானலில் 7.4 டிகிரி செல்சியஸ் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னை, புறநகரில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். இன்று முதல் 20-ம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.