

சென்னை: குடிநீர் குழாய் இணைப்புப் பணி காரணமாக, அண்ணாநகர் உள்ளிட்ட 3 மண்டலங்களில் சில இடங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
இதுதொடர்பாக, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணாநகர் மண்டலம், ஜவஹர்லால் நேரு 200 அடி சாலையில் உள்ள நீர் கால்வாய் சாலை மற்றும் லூக்காஸ் டிவிஎஸ் வீல்ஸ் இந்தியா தொழிற்சாலை சந்திப்பில் (பாடி மேம்பாலம் அருகில்), மத்திய பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால், 13-ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் 14-ம் தேதி காலை 10 மணி வரை திருவிக நகர், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய 3 மண்டலங்களில் சில பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இதனால், திருவிக நகர் மண்டலத்தில் கொளத்தூர், ஜவகர் நகர், செம்பியம், அயனாவரம், பெரம்பூர், அம்பத்தூர் மண்டலத்தில் கொரட்டூர், அண்ணாநகர் மேற்கு (விரிவாக்கம்), அண்ணா நகர் மண்டலத்தில் வில்லிவாக்கம், அண்ணாநகர் மேற்கு ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.