

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருணாநிதி புகைப்படத்தை ஏந்தி பேரணியாகச் சென்ற மருத்துவர்களை போலீஸார் கைது செய்தனர்.
தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்தல், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடந்த சில நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்திலிருந்து மருத்துவர்கள் பிரம்மாண்ட பேரணியைத் தொடங்கினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்தை ஏந்தியபடி அமைதியாகச் சென்ற மருத்துவர்கள், அண்ணா சாலையில் உள்ள அவரது உருவச்சிலை அருகே வந்தடைந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மருத்துவர்களைத் தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ராமலிங்கம் கூறுகையில், “அரசுடன் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளின் போது எங்களுக்குப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
ஆனால், அவை இன்றுவரை காகித அளவிலேயே உள்ளன. எங்களது நியாயமான உரிமைகளுக்காகவே நாங்கள் போராடுகிறோம். கருணாநிதி சிலை அருகே எங்களை போலீஸார் கைது செய்திருப்பது வருத்தமளிக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களின் போராட்டம் ஓயாது'' என்றனர்.