

திமுக தலைவர் ஸ்டாலின்
சென்னை: ‘ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று தவெக அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கத்தை மேற்கோள்காட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசின் போக்கை கடுமையாகச் சாடியுள்ளது ‘தி இந்து’ நாளேட்டின் இன்றைய தலையங்கம்.
நம் முதலமைச்சருக்குப் புரிவதுபோல சொல்ல வேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம், அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது. ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கத்தில், ‘மாற்றுக் கருத்துகளைப் பொறுத்துக் கொள்வதும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதுமே ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களாகும். இவற்றுக்கு வரும் அச்சுறுத்தல்கள் ஜனநாயக அமைப்பையே சீர்குலைத்துவிடும். தமிழகத்தில் தவெக ஆட்சித் தொடக்கத்தின் முதல் சில மாதங்களிலேயே, முதல்வர் அல்லது அவருடைய அமைச்சரவை சகாக்களைப் பற்றிப் பேசியதற்காக குறைந்தது 10 பேர் காவல் துறையின் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.
அனைத்து அரசியல் தலைவர்களும் அதிகாரத்துக்கு வரும்போதெல்லாம், தங்கள் நற்பெயரைப் பாதுகாப்பதற்கான கேடயமாக காவல் துறையையும் குற்றவியல் சட்டத்தையும் பயன்படுத்துவதை வழக்கமான ஒன்றாக்கி விட்டனர். இது ஜனநாயகத்துக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட அபாயத்தை உருவாக்குகிறது.
அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சிவில் வழக்குகள் அல்லது அரசியல்ரீதியான விவாதங்களின் இயல்பான வழிமுறைக்கு விட்டுவிடாமல், அவற்றை உடனடியாக குற்றவியல் தவறான தகவல்கள் அல்லது அவதூறுகளாகக் கருத அரசாங்கம் காட்டும் அவசரம் மனவேதனையளிக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.