

மாதவரம் தொகுதியில் பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம்.
சென்னை: மாதவரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, கடந்த 2016 மற்றும் 2021 என தொடர்ச்சியாக இருமுறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகிப்பவர் எஸ்.சுதர்சனம். தற்போது 3-வது முறையாக ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் முனைப்பில் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
மாதவரம் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து பிரச்சாரத்தின்போது விளக்கிப் பேசி வருகிறார்.
அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் மாதவரம் தொகுதியில் கல்வி, சுகாதார மேம்பாட்டு வசதிகள், குடிநீர், தெருவிளக்குகள், கழிவுநீர் கால்வாய், மழைநீர் கால்வாய், பேருந்து நிலையம், பட்டா, கட்டமைப்பு வசதிகள் என பல கோடி ரூபாய் செலவில் 5,551 பணிகளை செயல்படுத்தி உள்ளேன். ரூ.91.30 கோடியில் தணிகாசலம் நகர் கால்வாய் நீர்வழித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கடப்பாக்கம் ஏரி ரூ.58 கோடியிலும், இரட்டை ஏரி ரூ.47 கோடியிலும், பால் பண்ணை ஏரி ரூ.15 கோடியிலும் சீரமைக்கப்பட்டு, படகு சவாரியுடன் கூடிய சுற்றுச்சூழல் பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளன.
வடபெரும்பாக்கத்தில் ரூ.22.40 கோடியில் உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.15 கோடியில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் பலப்படுத்தப்பட்டுள்ளது. புழல் காந்தி தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளிக்கு ரூ.12.39 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
தொகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள், 800-க்கும் மேற்பட்ட பழைய மின் விளக்குகளை மாற்றிக் கொடுத்துள்ளேன். 2 ஆயிரம் பேருக்கு எனது சொந்த செலவில் தையல் இயந்திரங்கள் வழங்கி பெண்களை சுயதொழில் முனைவோராக மாற்றியுள்ளேன்.
பாலவேடு கிராம செல்லியம்மன் குளத்தை மேம்படுத்திக் கொடுத்துள்ளேன். 25-வது வார்டு கிளை நூலகத்தில் 60 ஆயிரம் புத்தகங்களை வைக்க அலமாரி அமைத்துக் கொடுத்துள்ளேன்.
தற்போது ரூ.406 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. மாத்தூர் எம்எம்டிஏ 2-வது பிரதான சாலையில் ரூ.12 கோடி செலவில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.2.40 கோடியில் செங்குன்றத்திலும், ரூ.11 கோடியில் பாடிய நல்லூரிலும் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
ஒருமுறைகூட சட்டப்பேரவையில் நான் விடுப்பு எடுத்தது இல்லை. இதற்காக சிறந்த எம்எல்ஏ என்ற பெயரையும் பெற்றுள்ளேன். 3-வது முறை வெற்றி பெற்றதும், மாதவரம் ரவுண்டானா புதிய பேருந்து நிலையம் முதல் சோழவரம் சுங்கச்சாவடி வரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.1,900 கோடி செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
மாதவரம் பால் பண்ணை பகுதியில் 450 ஏக்கர் பரப்பில் டைடல் பார்க், 22 ஏக்கரில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். மாதவரம் வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தை சாத்தாங்காடு வழியாக திருவொற்றியூர் வரையிலும், சோழவரம் நல்லூர் வரையிலும் நீட்டிக்க முயற்சி எடுப்பேன்.
புழல் ஏரியின் அழகை கண்டு ரசிக்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் 2.5 கிமீ தூரத்துக்கு நடைபாதை அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்களின் கோரிக்கைகள்
மாதவரம் தொகுதியில் வடமாநில லாரி போக்குவரத்து அதிகமாக இருப்பதால் மஞ்சம்பாக்கம்போல மற்றொரு இடத்தில் லாரி நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். மாதவரத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் மாநகர், புறநகர் பேருந்துகளை இயக்க வேண்டும். ஆந்திர பேருந்துகள் நிற்கும் இடத்தை மேம்படுத்த வேண்டும்.
நீண்ட காலமாக நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மாதவரத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை தரம் உயர்த்தி அமர்வு நீதிமன்றமாக கொண்டுவர வேண்டும்.
கொசுத் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.