

சென்னை: என்னை முதல்வராக்க திமுக, அதிமுக நேரடியாக என்னிடம் அணுகவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: என்னை முதல்வராக்க திமுகவோ, அதிமுகவோ அதிகாரப்பூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை.
தமிழகத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும். இந்தியாவில் உத்தரப்பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா, பிஹார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதல்வர்களாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான். இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக அதிமுக, திமுக மற்றும் அந்தக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் இணைந்து, என்னை முதல்வராக்க முயற்சி மேற்கொண்டதாக தகவல் கிட்டியது. அதற்கு நாங்கள் இணங்கவில்லை என்று பேட்டியில் தெரிவித்திருந்தார்.