

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோயமுத்தூர் அடுத்த மதுக்கரை அருகே தல்மனம்பாறை கிராமத்தில் தென்னந்தோப்புகளுக்கு கடந்த 4-ம் தேதி வந்த 2 லாரிகளை வழிமறித்து பார்த்தபோது, மத்திய அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் 500 பாரத் யூரியா மூட்டைகள் இருந்தன.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வேளாண்மைத் துறையினர் உர மூட்டைகளைப் பறிமுதல் செய்து, தென்னந்தோப்புக்கு மத்தியில் இருந்த தொழிற்சாலையில் ஆய்வு செய்தனர்.
அப்போது, யூரியாவை உருக்கி திரவ நிலைக்கு மாற்றும் தொழிற்சாலை செயல்படுவதும், அங்கு சுமார் 100 டன் அளவுக்கு மானிய உர மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
யூரியாவை உருக்கி, பிளைவுட் ஒட்ட பயன்படும் ரெசின் என்ற பசை தயாரித்து கேரளாவுக்கு அனுப்பியதும் கண்டறியப்பட்டது. மேலும், தொழிற்சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.38.42 லட்சம் மதிப்புள்ள 2,637 யூரியா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தல்மனம்பாறை அருகே ரொட்டிக்கவுண்டனூரில் இன்னொரு தொழிற்சாலைக்குள் யூரியா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தத் தொழிற்சாலையில் இருந்து ரூ.3.55 லட்சம் மதிப்புள்ள 244 யூரியா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, தொழிற்சாலை உரிமையாளர் முகமது ஜாபர், நில உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள, தமிழக அரசு உயர் அலுவலர் தலைமையில் தனி குழு அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.