

அனிதா ராதாகிருஷ்ணன் கைது
சென்னை: முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசிய குற்றச்சாட்டில், திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் ஜூன் 20-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக, தவெக நகரச் செயலாளர் செல்வம், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், இந்த பேச்சுக்கு அவதூறு வழக்கு தான் தாக்கல் செய்திருக்க வேண்டுமே தவிர, போலீஸார் வழக்குப்பதிவு செய்ய முடியாது. அதனால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில், ஏழு முறை எம்எல்ஏவாக இருந்த மனுதாரர் கட்டுப்பாட்டுடன் பேசியிருக்க வேண்டும். இந்த வழக்கை பதிவு செய்திருக்காவிட்டால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்கும். அதனால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது. புகார்தாரர் தரப்பிலும் முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “1967-ம் ஆண்டுக்கு பின் தமிழகத்தை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தான் ஆட்சி செய்திருக்கிறார்கள். நாம் தான் வாக்களித்து தேர்ந்தெடுத்தோம். மனுதாரர் சாதாரண குடிமகன் அல்ல; எம்எல்ஏவாக உள்ளவர்.
அவர் முதல்வர் பதவிக்கான மரியாதை கொடுக்க வேண்டாமா. ஏன் இதுபோன்ற மொழியில் ஒரு எம்எல்ஏ பேச வேண்டும்,” எனக் கேள்வி எழுப்பி, அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, இன்று திருச்செந்தூர் அடுத்த ஆத்தூர் அருகே ஆய்வுக்கு சென்ற போது, திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தவெக ஆட்சியில் முதல்முறையாக முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.