

டி.ராஜா
ராஜபாளையம்: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கூட்டாட்சி தத்துவம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு தகர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பாஜக மட்டுமின்றி அவர்களோடு சேரும் எந்தக் கட்சியானாலும் அவர்களை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும், என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழு கூட்டம் 3 நாட்கள் நடைபெற்றது.
இதில் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த மறுக்கும் மத்திய அரசை கண்டித்து 23, 24-ம் தேதி திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு அரசியல் நோக்கத்துடன் அனுமதி மறுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
தமிழக சட்டப்பேரவை தீர்மானம் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து எஸ்.ஐ.ஆரை நிறுத்தி வைக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவைக்கும் அரசுக்கும் எதிராக செயல்படும் ஆளுநருக்கு கண்டனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டத்தில் இந்திய மற்றும் தமிழக அரசியல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், பிஹார் தேர்தல் குறித்து விவாதம் நடைபெற்றது.
பிஹார் தேர்தல் முடிவு இண்டியா கூட்டணிக்கும், மகாகட்பந்தன் கூட்டணிக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது உண்மை. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இணைந்து அனைத்து வகையான சாகசங்களையும் செய்து வெற்றி பெற்றுள்ளன. பிஹார் தேர்தல் முடிவு தேர்தல் ஆணையம் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
மக்களின் உணர்வுக்கு தேர்தல் ஆணையம் மதிப்பளிக்க வேண்டும். தேர்தலை ஆணையம் சுந்திரமான அமைப்பாகவும், தலைமை தேர்தல் ஆணையர் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. தேர்தலில் பண பலத்தை கட்டுபடுத்த வேண்டும். அதுகுறித்து தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் பேச தயாராக இல்லை.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக செயல்பட தொடங்கி உள்ளது. மதபிரிவினைவாதம், சிறுபான்மை, தலித், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் செயல்படுகிறது. சனாதானம் என்ற பெயரால் சாதி கட்டமைப்புகள் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது.
பிரதமர் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா நினைவு தபால் தலையை வெளியிட்டது வெட்கக்கேடானது. நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பல தியாகங்களை செய்து உள்ளது.
ஆனால் ஆர்.எஸ்.எஸ்க்கு சுதந்திர போராட்டத்தில் எந்த பங்கும் இல்லை. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர், குடியரசு தலைவர் குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இந்திய கம்யூனிஸ்ட் ஏற்கவில்லை.
இது ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவை கைவிடுவது போல் உள்ளது. அதனால் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கூட்டாட்சி சத்துவம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு தகர்க்கப்படுகிறது. மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளது. தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவில் முன்மாதிரி முதல்வராக உள்ளார். எங்கள் கூட்டணி வரும் தேர்தலில் வெற்றி பெறும்.
பாஜக மட்டுமின்றி அவர்களோடு சேரும் எந்தக் கட்சியானாலும் அவர்களை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக காலூன்றினால் அடிப்படை தன்மை பாதிக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.