

சென்னை: பருவமழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க வடசென்னையில் 73 லட்சம் கன அடி வரை நீரை சேமிக்கும் வகையில் 4 புதிய குளங்களை மாநகராட்சி அமைத்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டு வரும் குளங்களுக்கு செய்தியாளர்களை நேரில் அழைந்துச் சென்று மாநகராட்சி அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
அந்த வகையில் வடசென்னையில் வியாசர்பாடி பழைய கூட்செட் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவிலான குளத்தை ரயில்வே துறையிடம் அனுமதி பெற்று 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.15 கோடி மதிப்பில் சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்துள்ளது. இந்த குளத்தில் 10அடி ஆழத்தில் 1.16 லட்சம் கன அடி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும்.
இதேபோல, திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியில் சாதாரண மழைக்கே பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லும் நிலை இருந்தது. அதைத் தடுக்கும் வகையில் தற்போது அந்த பகுதியில் ரூ.9 கோடி மதிப்பில் புதிய குளம் உருவாக்கப்பட்டுள்ளது. 23 அடி ஆழம் உள்ள இந்த குளத்தில் 1.05 லட்சம் கன அடி நீரை சேகரிக்கலாம்.
முன்னதாக இந்த இடம் கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டு பயன்படாமல் இருந்தது. தற்போது இங்கு புதிய குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குளம் நிரம்பினால் இங்கு உள்ள தண்ணீர் பக்கிங்ஹாம் கால்வாயில் செல்லும் வகையில் மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் மணலி மண்டலத்தில் 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடப்பாக்கம் ஏரியை ரூ.46 கோடியில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இப்பூங்காவில் பொதுமக்களைக் கவரும் வகையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், நடைபாதை, வண்ணத்துப்பூச்சி பூங்கா, 2 பறவைகள் தீவுகள், செயற்கை நீரூற்று மற்றும் நடைபாதை வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இந்த ஆண்டு 31 புதிய குளங்கள் உருவாக்கப்பட்டு, 47 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் மழை நீரை வெளியேற்றும் பணிக்காக மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் மட்டத்தையும் அதிகரிக்க குளங்கள் அமைக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு 87 இடங்கள் மழைநீர் தேங்கும் இடங்களாக அடையாளம் காணப்பட்டன. இந்தாண்டு 61 இடங்களில் தண்ணீர் தேங்கியது. அதில் பெரும்பாலான இடங்களில் ஒரே நாளில் தண்ணீர் வடிந்தது. மழைநீர் வெளியேற்றுவதற்கு மழைநீர் வடிகால் முக்கியமானது. ஆனால் மழைநீர் வடிகால் மட்டுமே தீர்வு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.