

சென்னை: மாநகராட்சி சார்பில், சென்னையில் உள்ள 7 கடற்கரை பகுதிகளில் 3 ஷிப்டுகளாக தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைகளை பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு உகந்த வகையில் மேம்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு நாள்தோறும் சுழற்சி முறைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைத் திட்டப் பகுதிகள் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் நாள்தோறும் பெரும்பாலான பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக வந்து செல்கின்றனர்.
வார இறுதி நாட்களில் இங்கு நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதனால், இந்தப் பகுதிகளில் நாள்தோறும் சுழற்சி முறையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
3 சுழற்சி (ஷிப்டு) முறைகளில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என மொத்தம் 152 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கடற்கரை சுத்தம் செய்யும் 9 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தலா 20 ஏக்கர் பரப்பளவில் 2 நீலக்கொடி கடற்கரை திட்டப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, திட்டம் 3-க்கான பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. திட்டம் 4 மற்றும் 5-க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 650 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
கடற்கரைப் பகுதிகளுக்கு வருகைதரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களது குப்பைக் கழிவுகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட்டு, மாநகராட்சியின் தூய்மைப் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.