

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் செய்யாத பணிக்கு ரூ.15.80 லட்சம் வழங்கியதாகவும் இந்த முறைகேடு குறித்து ஒப்பந்ததாரர் ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி ஒப்பந்ததாரராக இருப்பவர் பாண்டி. இவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காரைக்குடி மாநகராட்சி மேயர் அறை, துணை மேயர் அறை, கூட்டரங்கு மராமத்து பணியோடு, மேலும் 2 பணிகளுக்கு ரூ.18 லட்சத்தில் ஒப்பந்தம் எடுத்தேன்.
ஆனால், ரூ.18 லட்சத்துக்கான பணியை மட்டும் என்னை செய்யவிடாமல், அந்த பணியை திமுகவினரின் நெருங் கிய ஒப்பந்ததாரர் மூலம் செய்தனர். தற்போது, எங்களது நிறுவனப் பெயரில் காசோலையை கொடுத்துவிட்டு, பணத்தை எடுத்து தரச் சொல்கின்றனர்.
நான் மறுத்து வருவதால், மற்ற 2 பணிகளுக்குரிய பணத்தை விடுவிக்க அதிகாரிகள் மறுக்கின்றனர். நான் எடுத்த பணியை வேறொருவர் மூலம் பணி செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், கடந்த 3 ஆண்டுகளாக மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சங்கரனிடம் கேட்டபோது, ‘ஒப்பந்தப் பணி முடிந்ததால் பணத்தை விடுவித்தோம். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அந்த பணியை செய்யவில்லை என்றால், பணத்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கலாம்’ என்றார்.